×

வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

சென்னை: சென்னையில் மோட்டார் வாகன சட்டப்படி வாகன பதிவு எண் பலகையில் பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் போன்ற ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும் 427 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.2.13 லட்சம் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் மோட்டார் வாகன சட்டப்படி வாகன பதிவு எண் பலகையில் பிரஸ், காவல், வக்கீல், டாக்டர் போன்ற வாசகங்கள் ஒட்டுவது குற்றம் என்றும், எனவே அரசு அனுமதி வழங்காக தனியார் வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் மே 2 (நேற்று முன்தினம்) முதல் சென்னை பெரு நகர காவல் எல்லையில் போக்குவரத்து போலீசார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதில் வாகன பதிவு எண் பலகையில் தேவையில்லாத ஸ்டிக்கர் ஒட்டிய நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர். குறிப்பாக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களது வாகனங்களில் காவல் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை மடக்கி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

அந்த வகையில், முதல் நாளில் மட்டும் சென்னை பெருநகர காவல் எல்லையில் காவல், டாக்டர், பிரஸ், வக்கீல், சென்னை மாநகராட்சி, தலைமை செயலகம் என ஸ்டிக்கர் ஒட்டியதாக 427 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.2,13,500 வசூலிக்கப்பட்டது. இந்த வாகன சோதனை நேற்று 2வது நாளாக நீடித்தது. அப்போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் ஒலி பெருக்கி மூலம் வாகனங்களில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள், அடையாள குறியீடுகள் எதுவும் ஒட்டக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...